2019 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், வரும் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத் தொடரின் இன்று (ஜனவரி 3) முன்னாள் முதல்வர் கலைஞர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண சிங், விவசாய ஆர்வலர் நெல் ஜெயராமன், மறைந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸ், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலைஞருக்கு இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “கலைஞர் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அயராது உழைத்த அவர், இன்று நம்மிடையே இல்லை. பல பதவிகளை வகித்தவர், அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர். சுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தவர். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான கலைஞர் சமூக நீதிக்காகப் போராடியவர். மனஉறுதியாளர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் பற்றாளர், தனது அழகு தமிழால் அனைவரையும் அரவணைத்தவர். அரசியல் மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் அவரது தமிழால் ஆட்கொண்டவர் கலைஞர்” என்று புகழாரம் சூட்டினார்.
“அண்ணாவின் அன்புத் தம்பியான கலைஞரின் அழகு தமிழுக்கு மயங்காதவர் எவரும் இல்லை. தனது உடன்பிறப்புகளுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை அவர் எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்ட பன்னீர்செல்வம், பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் என்று முரசொலியில் கலைஞர் எழுதியதையும் நினைவுகூர்ந்தார். அரசியல் எல்லைகளைக் கடந்து கலைஞர் மீது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அன்பு கொண்டிருந்தனர் என்பதையும் குறிப்பிட்டார்.
கலைஞருடனான நினைவுகளை பகிர்ந்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், “கண்ணீரை அடக்கிக் கொண்டு கனத்த இதயத்துடன் பேசுகிறேன். என் மரணத்திற்கு கலைஞர் கண்ணீர் விடுவார் என நினைத்தேன், ஆனால் அவர் மரணத்திற்கு நான் கண்ணீர் விட வேண்டிய நிலை வந்துவிட்டது. பல குடியரசுத் தலைவர்களை உருவாக்கியவர். எனக்கு இரண்டாவது உயிரைக் கொடுத்தவர். என்னைத் தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்தவர் அவர். 2007ல் எனக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது, என் அறையிலேயே இருந்து கலைஞர் என்னை பார்த்துக்கொண்டார்” என்று கண்ணீர் மல்க பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவின் மிகமூத்த அரசியல் தலைவர் கலைஞர். 13 வயதிலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர். 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவரான கலைஞர் பன்முகத் தன்மை கொண்டவர். அவரின் சாதனைகள் இம்மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும். பராசக்தி படத்தின் மூலம் தான் ஒரு பகுத்தறிவாளர் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்தியவர். 5 முறை முதல்வராக இருந்த பெருமைக்குரியவரான கலைஞர், சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு அளித்தவர். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது” என்று புகழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறைக்குச் சென்ற ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள், கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவித்தனர்.
.
Discussion about this post