தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சர்வம் தாளமயம் திரைப்படத்தைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்தடுத்து இரு படங்கள் வெளியாகின்றன. நாளை (ஏப்ரல் 5) குப்பத்து ராஜா திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்த வாரம் (ஏப்ரல் 12) வாட்ச்மேன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் நகைச்சுவை பாணியில் திரைக்கதை அமைத்து ஹிட் படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நாயகி ஈஷா ரெபா நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
சி.சத்யா இசையமைக்கும் இந்தப் படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தவிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Discussion about this post