நடிகர் சண்முகராஜன் மீது அளித்த பாலியல் புகாரை நடிகை ராணி திரும்பப் பெற்றுள்ளார்.
நாட்டாமை படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகை ராணி தற்போது சன் டி.வி தொலைக்காட்சித் தொடரான நந்தினி சீரியலில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை கொரட்டூரில் நடைபெற்று வருகிறது.
இந்த சீரியலில் ராணிக்கு கணவராக சண்முகராஜன் என்பவர் நடித்து வருகிறார். இவர் விருமாண்டி, எம்டன்மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
இந்நிலையில் நடிகர் சண்முகராஜன், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ராணி கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சண்முகராஜன் சீரியலில் நடிக்கும்போது தன்னை கண்ட இடங்களில் தொடுவதாகவும், அடிக்கும் காட்சிகள் வரும்போது உண்மையாகவே அடிப்பதாகவும் குறிப்பிட்டார்.
சண்முகராஜனுக்கு கொரட்டூரில் சொந்த வீடு இருக்கும்போது, அங்க தங்காமல் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு பக்கத்தில் அறைஎடுத்து தங்குவதாகவும் இரவில் தன்னுடைய அறைக்கு தனியாக வரும்படி தன்னை அழைப்பதாகவும் குற்றம் சாட்டினார் ராணி.
இதனிடையே காவல்நிலையம் சென்ற சண்முகராஜன் ராணியின் புகார் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனக்கும் ராணிக்கும் பிரச்சனை நடந்தது உண்மைதான் என்றும், தற்போது இருவருக்கும் இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டதால் ராணி புகாரை திரும்பப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Discussion about this post