தனுஷுடன் தொழிலில் போட்டியாளராக இருந்தாலும் நிஜத்தில் நட்பாக இருக்கும் நடிகர் சிம்பு, தனுஷின் ‘வடசென்னை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் வடசென்னை. இவர்களுடன் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் உலகமெங்கும் இன்று (அக்டோபர் 17) வெளியாகி இருக்கிறது.
வடசென்னை ரிலீஸை ஒட்டி தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு. அதில், “அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் வடசென்னை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசும் போது, “வடசென்னை படத்தில் தற்போது நான் நடித்துள்ள அன்பு கதாபாத்திரத்தில் சிம்பு தான் முதலில் நடிக்க இருந்தார். குமார் என்ற பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைப்பதாக வெற்றிமாறன் கூறினார். அப்போது நான் வெற்றிமாறனிடம், ‘சார் எனக்குக் கொஞ்சம் பெருந்தன்மை இருக்கிறது, ஆனால் அவளோ பெரிய பெருந்தன்மை எல்லாம் இல்லை! தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று சொன்னேன்” என சிம்பு நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை தான் எடுத்துக்கொண்டதை தெரிவித்தார்.
இதே போல் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தற்போது தனுஷ்தான் தகுதியானவர், அவரை அணுகுங்கள் என்று சொல்லி இருக்கிறார் சிம்பு. அந்த நேரத்தில் தனுஷும் பிஸியாக இருந்ததால் இறுதியாக அதில் ஜீவா நடித்தார்.
Discussion about this post