குடிபோதையில் தகராறு செய்த கணவனை பிள்ளைகளும், தாயும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாட்றம்பள்ளி பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பத்தூர்: கணவனை பிள்ளைகளுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணையும், மகன்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நாட்றம்பள்ளி அடுத்த கிட்டபையனூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சின்னராஜ் . இவருக்கு இரண்டு மனைவிகள். முதலாவது மனைவியை விட்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து, தற்போது இரண்டாவது மனைவி வனிதா உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு குமரேசன் என்ற மகனும், நிரோஷா என்ற திருநங்கையும் உள்ளனர்.
இச்சூழலில் நேற்று மாலை சின்னராஜ் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரவு முழுவதும் கணவன் மனைவி இடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த நிரோஷா, குமரேசன் ஆகிய இருவரும் சின்னராஜை கட்டையால் தலையில் அடித்துள்ளனர்.
இதில் மயங்கிக் கீழே விழுந்த அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். அதன்பிறகு காலையில் அக்கம் பக்கத்தினர் சின்னராஜ் இறந்ததை அறிந்து, சந்தேகத்தின் பேரில் நாட்றம்பள்ளி காவல்நிலையத்திற்கு தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வனிதா, நிரோஷா, குமரேசன் ஆகிய மூவரையும் கைது செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில், தன்னுடைய கணவர் வேலைக்கு செல்வதில்லை என்றும், தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வதாக தெரிவித்துள்ளார். அதனால்தான் அடித்துக் கொன்றதாக மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Discussion about this post