உத்தரபிரதேசத்தில் குரங்குகள் தாக்கி 72 வயது முதியவர் பலியான சம்பவத்தில், குரங்குகள் மீது எஃப்.ஐ.ஆர். பதிய வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியை சேர்ந்தவர் தரம்பால் சிங். 72 வயதான தரம்பால் சிங், வீட்டின் அருகிலுள்ள வனப்பகுதியில், விறகு மற்றும் சுள்ளிகளை பொறுக்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வனப்பகுதிக்கு அருகிலுள்ள கட்டிமுடிக்கப்படாத கட்டடத்தில் வசித்து வரும் குரங்குகள், அங்கிருந்த செங்கற்களை கொண்டு தரம்பால் சிங்கை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த தரம்பால் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தரம்பால் சிங்கின் இறப்பிற்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு பதியும் பொருட்டு, குரங்குகள் மீது எஃப்.ஐ.ஆர். பதிய வேண்டும் என தரம்பால் சிங்கின் குடும்பத்தினர் போலீசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குரங்குகள் மீது எல்லாம் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய இயலாது என்று போலீசார் தரப்பில் தெரிவித்ததன் காரணத்தினால், குடும்பத்தினர் போலீஸ் உயரதிகாரிகளுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுத தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் தங்களின் தந்தையின் மரணம் விபத்து என போலீசார் தெரிவிப்பதாகவும், அது விபத்தல்ல கொலை என்றும் கூறியுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்ட செங்கற்களால் தாக்கப்பட்ட தனது தந்தை உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு துடிதுடித்து இறந்ததாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குரங்குகளால் மக்கள் பெரும் துயரை அனுபவிப்பதாகவும், அந்த குரங்குகளை பழிவாங்காமல் விட மாட்டேன் என்று தரம்பாலின் குடும்பத்தினர் சபதம் ஏற்றுள்ளனர்.
Discussion about this post