நடிகை பலாத்கார வழக்கில்சிக்கிய நடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் அண்மையில் பிரபல நடிகை கடத்தப்பட்டு காரில் வைத்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் சினிமா துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகை கடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பிரபல மலையாள நடிகர் திலீப்பை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். திலீப் கைது செய்யப்பட்டதும், அவர் மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக நடிகர் மோகன்லால் மலையாள நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அதன்பிறகு நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் நடிகர் திலீப்பை மீண்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்க மலையாள நடிகைகள் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. இதனைக் கண்டித்து நடிகைகள் ரீமாகல்லிங்கல், கீது மோகன்தாஸ் உள்பட 3 பேர் ராஜினாமா செய்தனர். பத்திரிகையாளர்களை சந்தித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் திலீப் சங்கத்திலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இதுபற்றி நேற்று கொச்சியில் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நடிகர் திலீப் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை சங்கம் ஏற்றுக் கொண்டது. இது நடிகர் சங்க நிர்வாககிள் மூலம் நடைபெற்றுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக அம்மாவில் இருநது விலகிய நடிகைகள் மீண்டும் சங்கத்தில் சேர வேண்டுமென்றால் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறுபவர்கள் அதை நடிகர் சங்கத்தில் முறையாக புகார் அளிக்க வேண்டும், அதன் பேரில் நடிகர் சங்கம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு மோகன்லால் கூறினார்.
Discussion about this post