மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கிற்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த சையது தமீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அதனை அடுத்த நிகழ்வுகள் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதில் ஜெயலலிதா எப்போது மரணமடைந்தார், மரணம் எப்போது அறிவிக்கப்பட்டது என்ற கேள்விக்கு, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி என பதில் அளிக்கப்பட்டுள்ளது. அவரது சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு அரசு சார்பில் எவ்வளவு கட்டணம் செலுத்தப்பட்டது என்ற கேள்விக்கு, அரசு எந்தச் செலவையும் ஏற்கவில்லை என பதிலளிக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்கிற்காக தமிழக அரசு எவ்வளவு தொகை செலவு செய்தது, என்னென்ன செலவுகள் என்று எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு, 99 லட்சத்து 83 ஆயிரத்து 586 ரூபாய் செலவானது என்ற பதில் கிடைத்துள்ளது.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜெயலலிதா ஓய்வூதியத்திற்கு தகுதியானவரா என்றும், யார் ஓய்வூதியம் பெறுகிறார்கள், அவர்களின் பெயர், முகவரி தேவை என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்த தகவல்களை தலைமைச் செயலக அதிகாரிகள் கையாளுகின்றனர் என்றும் அரசு பதில் அளித்துள்ளது.
Discussion about this post