கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான் பேரணியில் வன்முறை ஏற்பட்டதாகவும் இதனால் அதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
அந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் சொல்ல கடந்த 2018ஆம் ஆண்டு மே 30ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார்.
தூத்துக்குடி சென்று வந்த பின் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-‘தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறையின்போது அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதும், போலீசாரை தாக்கியதும் சமூக விரோதிகள்தான். போராடிய மக்கள் அல்ல; அவர்கள் யாரென்று எனக்கு தெரியும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாட்களில் எப்படி சமூக விரோதிகள் உட்புகுந்து போராட்டத்தை திசைதிருப்ப முயன்றார்களோ அதேபோன்றுதான் இங்கேயும் சமூக விரோதிகள் உட்புகுந்தனர் என்று கூறினார்.
மேலும் அந்த சமூக விரோதிகள் யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அதனை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பிருந்தது.
அதில் வரும் பிப்ரவரி 25ஆம் தேதி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் அவருக்கு தெரிந்த விவரங்களை தெரிவிக்குமாறு அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வரும் 25-ந்தேதி நேரில் ஆஜராவதில் இருந்து ரஜினி விலக்கு கேட்டு அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரசிகர்கள் அதிகளவில் கூடினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே நான் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அவர், மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயாராக இருப்பதாகவும் ரஜினி கூறியுள்ளார்.
Discussion about this post