காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் இன்று ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று இந்திய எல்லையோர பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பிற்பகல் சுமார் 2 மணியளவில் சுந்தர்பானி செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சில பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகுமாறு எச்சரித்தனர்.
இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டவாறு முன்னேறி வந்தனர். இதில் இந்தியாவை சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து அங்கு இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வரும் நிலையில், மேலும் ஒரு இந்திய வீரர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post