மக்கள் மனதில் விதைக்கப்படும் தியாக வரலாறும் போர்க்குணமும்தான் மண்ணையும் பண்பாட்டையும் காப்பாற்றுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது திரௌபதி வழிபாடு.
இந்திய பண்பாட்டில் முதன்மை இடத்தை பிடிக்கும் இதிகாசங்கள், இராமாயணமும் மகாபாரதமும் ஆகும். ஒரு பெண்ணின் கற்பை காப்பது இராமாயணத்தின் நோக்கம். இழந்த மண்ணை மீட்பது மகாபாரதத்தின் நோக்கம். தமிழ்நாட்டின் கிராமப்புற மக்களிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய இதிகாசம் மகாபாரதமே!
போரில் ஈடுபடவேண்டிய மக்களுக்காக – அதாவது பெரும் படையை திரட்டுவதற்காக – பல்லவ மன்னர்கள் உருவாக்கியதுதான் தமிழ்நாட்டின் மகாபாரத வரலாறு ஆகும். மகாபாரதத்தின் போர்க்கள காட்சிகள் மட்டும் தமிழ்நாட்டில் பாரதக் கதையாகவும், தெருக்கூத்தாகவும் கடந்த 1300 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது.
பல்லவமன்னன் பரமேஸ்வரவர்மன் வடதமிழ்நாட்டில் பாரதம் படிக்க நிலத்தை தானமாக அளித்தான் என கூரம் செப்பேடு கூறுகிறது. சோழ மன்னர்கள் பாரதம் படிப்பதற்காக அளித்த நிலங்கள் ‘பாரத விருத்தி’ என்கிற பெயரால் வழங்கப்பட்டதாக வரலாற்று அறிஞர் சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார்.
இவ்வாறான – பாரதம் படிப்பதும், தெருக்கூத்தும், திரௌபதி வழிபாடும் – வன்னியர்களின் சிறப்பு அடையாளமாக இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
“பின்னணி வரலாறு”
தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். காடுவெட்டி என்றும் போத்துராஜா என்றும் அழைக்கப்பட்டவர்கள் பல்லவ மன்னர்கள். கி.பி. 615 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் மீது சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி போர் தொடுத்தான்.
மகேந்திரவர்ம பல்லவன் புலிகேசியால் காஞ்சி கோட்டைக்குள் முடக்கப்பட்டான். இந்த தோல்விக்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்ம பல்லவன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான். பல்லவர்கள் மாபெரும் வெற்றிபெற்றார்கள். பல்லவர்களின் வெற்றிக் கல்வெட்டு, இப்போதும் பாதாமி கோவிலில் இருக்கிறது. பல்லவர்களின் வெற்றிச் சின்னமாக பாதாமியில் கொண்டுவரப்பட்டு, தெருச்செங்காட்டன் குடியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையால் தான் தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு உருவானது. (பாதாமி – கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் – தமிழில் வாதாபி).
இந்தப் போரால் எழுந்த ‘பல்லவர் – சாளுக்கியர் மோதல்’ சுமார் 140 ஆண்டுகள் நீடித்தன. கடைசியில் கி.பி. 757 ஆம் ஆண்டில் பாதாமி சாளுக்கியர்கள் ஒரேயடியாக ஒழிக்கப்பட்டனர்.
கல்கியின் ‘சிவகாமி சபதம்’ வரலாற்றுக் கதையும் எம்ஜிஆர் நடித்த ‘காஞ்சித்தலைவன்’ திரைப்படமும் இந்த வரலாற்றைத்தான் குறிப்பிடுகின்றன.
மீண்டும் மீண்டும் போர்கள் நடந்த இந்த காலத்தில், நாட்டு மக்கள் எல்லோருமே போர் வீரர்களாக மாற வேண்டும் என்பதற்காக, பல்லவ மன்னர்கள் வட தமிழ்நாட்டில் பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர். இதுவே பாரதம் படிக்கும் பழக்கமாகவும், தெருக்கூத்தாகவும், திரௌபதி வழிபாடாகவும் மலர்ந்து – வட தமிழ்நாடெங்கும் திரௌபதி கோவில், தர்மராஜா, போத்துராஜா, கூத்தாண்டவர் ஆலயங்களாகவும் வீற்றிருக்கின்றன.
வன்னியர்கள் வாழும்பகுதிகளில் இப்போதும் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்துள்ளது. இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர் சமூகத்தினரிடையேதான். 1300 ஆண்டுகள் கடந்தும் வடதமிழ்நாட்டு மக்கள் – பாரதம் படிப்பதையும், திரௌபதி அம்மன் திருவிழாவையும் இப்போதும் நடத்தி வருகிறார்கள்.
குறிப்பு: அக்னியில் உதித்த திரௌபதி வட இந்திய பாரத புராணங்களில் முதன்மை இடத்தை பிடிக்கவில்லை. இந்தியாவின் வேறு பகுதிகளில் திரௌபதி வழிபாடு முதன்மையாக இல்லை. வன்னியர்கள் வாழும் பகுதிகளில் தான் திரௌபதி கோவில்களும் வழிபாடும் இருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவில் வன்னியர்கள் திரௌபதியை கொண்டாடுகிறார்கள். தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ் போன்ற கடல்கடந்து வன்னியர்கள் குடியேறிய பகுதிகளிலும் திரௌபதி வழிபாடு உள்ளது. வன்னியர்கள் வாழும் பகுதிகளில் உள்ள இதர சமூகத்தவர்களும் திரௌபதியை வழிபடுகின்றனர்.
Discussion about this post