பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர், தங்களது திருமணம் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
பாலிவுட்டின் முன்னணி ஜோடியான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் காதலித்து வருவதாகவும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைப் போலவே இத்தாலியில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அவர்கள் தரப்பில் இருந்து வெளிவராமல் இருந்தது. பத்மாவத் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்த இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என பாலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. சமீபத்தில் அவர்கள் இருவரும் இத்தாலி சுற்றுப்பயணம் மேற்கொண்டது, இந்த தகவல்களை மேலும் உறுதிப்படுத்தும் வண்ணம் இருந்தது.
இந்தநிலையில், நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தங்களது திருமணம் நடைபெற இருப்பதாக ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. திருமண பத்திரிகையை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ள அவர்கள், திருமணம் நடைபெறும் இடம் குறித்து அறிவிக்கவில்லை. அந்த அழைப்பிதழில், எங்களது திருமணம் வரும் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை குடும்பத்தினரின் ஆசிகளுடன் அறிவிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Discussion about this post