ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் இது சொந்த வீடா? வாடகை வீடா?வாடகை எவ்வளவு? என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள். அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை நீங்க முதலியாரா? கவுண்டரா? கிரிஸ்டியனா? என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள். அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை
வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள். வீட்டிற்கு வந்தவர்களிடம் காபியா டீயா என்றால், கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள். அல்லது மோரோ, குளிர்பானமோ கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன், என்று அலட்சியப் படுத்தாதீர்கள். வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.
வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக உடனே கேட்டையோ ,கதவையோ சாத்தாதீர்கள். ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க? அல்லது ஏன் வேலைக்கு போகல? என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள். சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட “சாப்பிடுறீங்களா” என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள். மாறாக “சாப்பிடுங்க “என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க.
பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா என்று கேட்காதீர்கள். வேண்டுமென்றால் உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள்? எங்கு வேலை செய்கிறார்கள்? என்று சொல்லுங்கள். கேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும். அவரை வற்புறுத்தாதீர்கள்.நட்பாபேசறேன், உரிமையில பேசறன்னு, பொதுவுல, அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ அறிவுரை ஆரம்பிக்காதீர்கள்.
உங்களுக்கு என்ன குறைச்சல். இரண்டு பேரு சம்பளம் வாங்குறாங்க, பையன் கை நிறைய சம்பாதிக்கிறான், இப்படி சொல்றவங்க கிட்ட , நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க. அல்லது அப்படிப்பட்ட உறவுகளை விட்டு விலகிடுங்க. நீங்க எங்கெல்லாம் பிளாட் வாங்கி வச்சிருக்கீங்களோ வந்த இடத்தில் பட்டியலிடாதீர்கள். இது அவருக்கு அவர் மனைவிமுன் மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும். இதை உணருங்கள். வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள். மாறாக அன்பை காட்டுங்கள்.
வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் என்று பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள். வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள். அல்லது வீட்டிற்கு வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டுக்கு சொல்கிறேன் என்று கிண்டலடிக்காதீர்கள்.
மிக முக்கியமான இன்னொன்று பிள்ளைக்கு கல்யாணமாயிடுச்சா? குழந்தை எதுவும் ? எத்தனை வருஷமாச்சு? டாக்டரை எதுவும் பார்த்தீங்களா? இது ஒரு கேவலமான உரையாடல் . தயவு செய்து அப்படி ஒரு காரியத்தை செய்யாதீர்கள். இனிக்கும் உறவுகள் கண்டிப்பாக வேண்டும். அதனால் கண்டிப்பாக இதனை பின்பற்றுங்கள்.
Discussion about this post