
மக்கள் ஆதரவு இல்லாமல் நாம் அரசியலில் நினைத்ததை சாதிக்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என அர்த்தம் என குறிப்பிட்டுள்ளார். 30-40 ஆண்டுகளாக மன்றத்தில் இருப்பது மட்டுமே பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ தகுதி ஆகி விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் என் அனுமதியுடனேயே எடுக்கப்படுகிறது என்றும் நிர்வாகிகள் நியமனம், நீக்கம் என அனைத்து நடவடிக்கைகளும் எனது பார்வைக்கு வருவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பதவி, பணத்தாசை உள்ளவர்கள் அருகில் வர வேண்டாம் என்று கூறியது வெறும் பேச்சிற்காக அல்ல என்றும் தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை அறிமுகப்படுத்தி, மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றவர்களைப் போலவே அரசியல் செய்வதற்கு நாம் ஏன் புதிதாக அரசியலுக்கு வர வேண்டும். மேலும், அரசியலில் பதவி சுகத்துக்கும், பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடனும் வருபவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன் என்றும் பதவி சுகம் காணும் எண்ணத்தில் உள்ளவர்கள் இப்போதே விலகி விடுங்கள் எனவும் ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்.
Discussion about this post