குஜராத் வைர வியாபார நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக கார்கள் வழங்கும் விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார். குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைர வியாபாரம் செய்து வருபவர் சாவ்ஜி டோலாகியா. இவரது வைர நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயாகும். தனது நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் ஊழியர்களுக்கு இவர் ஒவ்வொரு ஆண்டும் வீடுகள், தங்க நகைகள், கார்கள், பைக்குகள் போன்றவற்றை தீபாவளி போனசாக வழங்கி ஊக்குவிப்பது வழக்கம்.
இந்நிலையில், குஜராத் வைர வியாபார நிறுவன ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனசாக கார்கள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று கலந்து கொள்கிறார். இந்த ஆண்டு மொத்தம் 600 ஊழியர்களுக்கு கார்கள் பரிசாக அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் பாதி மாருதி சுசூகி கார்களும், மற்றவை சாலினோ வகை கார்களாகும். இதில் குறிப்பிட்ட சிலருக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கார்களுக்கான சாவிகளை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக டோலாகியா கூறுகையில், வைர கற்களை பிரிப்பது, செதுக்குவது போன்ற அடிப்படை வேலைகளை கற்று, படிப்படியாக முன்னேறி முக்கிய பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். இவர்களது பணி மற்றும் நேர்மையைப் பாராட்டும் வகையில் கார்களை பரிசளித்து வருகிறேன். இது பிற ஊழியர்களையும் ஊக்குவிக்கும் என அவர் கூறினார்.
Discussion about this post