இறந்த விட்டார் என்று நினைத்து இறுதிச் சடங்கு முடிந்த நிலையில் 15 நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் வந்தது குடும்பத்தினரிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகில் உள்ள ஆடிகொள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சஜி. இன்னும் திருமணமாகாத சஜி அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். திடீர் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறும் சஜி, கர்நாடகாவில் ஏதாவது வேலை பார்த்துவிட்டு நான்கைந்து நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 3 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அவர், பின்னர் வீட்டுக்குத் திரும்பவில்லை. வெகு நாட்களாகியும் வராததால் போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் பைரகுப்பா காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசுக்கு தகவல் வந்தது. அந்த உடலை சஜியின் குடும்பத்தினரிடம் போலீசார் காட்டினர். சஜியின் சகோதரர் ஜினேஷ், இது அவர் உடல்தான் என்பதை உறுதியாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடலை அடிக்கொள்ளி புனித செபாஸ்டியன் தேவாலய கல்லறையில் புதைத்து விட்டனர். இதன் பின்னர் 15 நாட்களுக்குப் பிறகு, திடீரென்று வீட்டுக்கு வந்துள்ளார் சஜி. அவரைக் கண்டதும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஸ்டேஷனில் மீண்டும் புகார் கொடுத்துள்ளார் சஜி. இதற்கிடையே, சஜி என்று நினைத்துப் புதைக்கப்பட்ட உடலை வெளியே எடுக்குமாறு தேவாலயம் சார்பில் அவரது குடும்பத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post