நடிகர் விஜய் அவர்களே உங்கள் நீதி போதனைகள் சினிமாவுக்கு மட்டும்தானா, பொதுவாழ்வில் அதைக் கடைப்பிடிக்க மாட்டீர்களா என்கிற கேள்விகளுடன் தமிழக தியேட்டர் ஒன்று ‘சர்கார்’ படத்தை ரிலீஸ் செய்ய மறுத்துள்ளது.
சர்கார் படத்தின் டிக்கெட் விலை முதல் இரண்டு நாட்களுக்கு அரசு ஆணையையும் மீறி 2000 முதல் 5000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இது குறித்து வெளிப்படையாக ட்வீட் பண்ணியுள்ள தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டர் நிர்வாகம், ‘முதல் இரண்டு நாட்களுக்கு டிக்கட் விலையை 200 ரூபாய்க்கு மேல்தான் விற்க வேண்டும் என்ற விநியோகஸ்தரின் நிபந்தனையில் எங்களுக்கு உடன்பாடு இல்லாததால் எங்கள் தியேட்டரில் நாங்கள் ‘சர்கார்’ படத்தைப் போட விரும்பவில்லை. நாங்கள் எப்போதும் தரமான நல்ல சினிமாவை நியாய தர்மங்களுக்கு உட்பட்டே திரையிட விரும்புகிறோம். நடிகர் விஜய் நல்ல விஷயங்களை சினிமாவில் பேசினால் மட்டும் போதாது. அதை சொந்த வாழ்விலும் கடைப்பிடிக்கவேண்டும்’ என்கிறது அந்த ட்வீட்.
சர்கார் படம் தமிழகத்தில் 140 கோடி ரூபாயை எப்படி டிக்கட் விற்பனை மூலம் வசூல் செய்யப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம். அதற்கான ஒரு பதில் இது. படத்துக்குப் போட்டியாக வேறு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் நேரடியான, மறைமுகமான முயற்சிகள் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது.
பில்லா பாண்டி என்ற படம் மட்டும் தட்டுத் தடுமாறி 150 திரைகளில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சர்கார் திரையிட முடியாத திரைகள் பில்லா பாண்டியைத் திரையிட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் முதல் நாள் 3500 காட்சிகள் சர்க்கார் படம் திரையிடப்படக்கூடும். இதில் 70% . காட்சிகளுக்கான டிக்கட்டுகள் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிளால் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன.
மதுரை விநியோகப் பகுதியில் பெரும்பான்மையான தியேட்டர்களில் அதிக விலை கொடுத்துத் திரையிட தியேட்டர் முதலாளிகள் ஆர்வம் காட்டவில்லை. அம்மாதிரியான தியேட்டர்களில் மூன்றாம் தரப்பாக எம்ஜி அடிப்படையில் விஐய் ரசிகர்களும், தொழில் முறையில் காட்சிகளைக் குத்தகைக்கு எடுப்பவர்களும் விநியோகஸ்தரிடம் ஒப்பந்தம் செய்து சர்க்கார் படத்தைக் குறிப்பிட்ட ஊர்களில் உன்ன அனைத்து தியேட்டர்களிலும் வாடகை அடிப்படையில் திரையிடுகின்றனர்.
சர்க்கார் படத்தின் டிக்கட்டுகளை அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் இரு மடங்கு விலையில் முதல் வாரம் விற்பனை செய்ய வேண்டும் என தியேட்டர் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறுக்கும் தியேட்டர்களுக்குப் படம் இல்லை எனக் கூறப்பட்டது.
தவிர்க்க முடியாத தியேட்டர்களின் டிக்கட்டுகளை விநியோகஸ்தரே மொத்தமாக வாங்கி தேவையைப் பொறுத்து விலை அதிகரிக்கப்பட்டு 300 முதல் 1500 ரூபாய் வரை இன்று காலை முதல் தனியார் விடுதிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது (இது சென்னையில் மட்டும்).
சென்னை தவிர்த்து வெளியூர்களில் தியேட்டர் நிர்வாகம், ரசிகர் மன்ற நிர்வாகிகள் இவ்வேலையைச் செய்துவருகின்றனர் எனக் கூறப்படுகிறது.
200 ரூபாய்க்கு குறைவாக சர்க்கார் படத்தின் டிக்கட்டுகள் எங்கும் கிடைக்கவில்லை என்பதே கள நிலவரம். முதல் நாள் தமிழகத்தில் 30 கோடி ரூபாய் வரை டிக்கட் விற்பனை மூலம் வசூலிக்கத் திட்டமிட்டாலும் 20 கோடியைத் தாண்டுவதே ஐயம்தான் என்பதே தற்போதைய நிலைமை.
அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கட் விற்பனை செய்யப்பட வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கூறி வந்தார், தமிழக அரசும் நீதிமன்றமும் அதனையே கூறி, கறாராக இதை அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இருப்பினும் ஊழலையும், லஞ்சத்தையும் அழிக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தும் சர்க்கார் படத்தின் வசூல் விதிமீறல், வரி ஏய்ப்பைப் பிரதானமாகக் கொண்டே நாளை முதல் இருக்கப் போகிறது .
Discussion about this post