வருகிற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு முன்னெடுத்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் நவம்பர் 1 ஆம் தேதி சரத்பவார், பரூக் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் சந்தித்துப் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுலையும் சந்தித்தார்.
பின்னர் வெளியே வந்த இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, “நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பா.ஜ.க-வை வீழ்த்துவதே எங்களின் முக்கிய நோக்கம். இது தொடர்பாக திமுகவிடம் விரைவில் பேசுவோம்” என்று தெரிவித்திருந்தார்.
இதனை வரவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,நவம்பர் 2 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது.
‘தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்’ என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன். மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை (நவம்பர் 8) காலை சென்னை வருகிறார். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் பாஜகவுக்கு எதிரான ஒரே அணி பற்றி பேச்சு நடத்தும் சந்திரபாபு நாயுடு, நவம்பர் 9 ஆம் தேதி கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்திப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post