நடிகர் விஜய் நடித்த மெர்சலில் காஜல், சமந்தாவை விடவும் அதிகம் கவனிக்கப்பட்டவர் ஃபிளாஷ்பேக்கில் வரும் ஐஸ்வர்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனனே. தனது துறு துறு நடிப்பால் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் நித்யா, மெர்சல் படத்திற்கு பிறகு தற்போது தி அயர்ன் லேடி எனும் ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க ஆயத்தமாகிவருகிறார். மற்றொரு புறம் உதயநிதியுடன் சைக்கோ எனும் படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்தியில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் மிஷன் மங்கள் எனும் படத்திலும் நடிக்கவுள்ளார் நித்யா. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் நிகழ்வுகளை மையமாக வைத்து தயாராகும் இந்தப்படம் ஒரு விண்வெளிப் படமாக உருவாகிவருகிறது.
அக்ஷய் குமார் லைகா தயாரிப்பில் தமிழில் தான் நடித்துவரும் 2.O எனும் படம் வெளியாகவுள்ள நிலையில் தனது புதிய மூன்று படங்களை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபில்ம்ஸ் இணைந்த கூட்டணிக்கு நடித்துக்கொடுப்பது என முடிவெடுத்துள்ளார் . அந்த வகையில் இந்த மிஷன் மங்கள்யான் அதில் முதல் படமாக அமைந்துள்ளது. இப்படத்தினை ஜெகன் ஷக்தி இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் இணைந்ததன் வாயிலாக இந்திய ஆங்கிலப்படம் தொடங்கி தமிழ் வரை ஒரு ரவுண்டு வந்துவிட்ட நித்யா மேனன் முதன்முறையாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார். இதில் அவர் இணைந்தாலும் அவருடன் இணைந்து வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, தப்ஸி பன்னு என இந்தியில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர்.
எனவே இந்தப் படத்தில் நித்யாவுக்கு ஒரு பெரிய போட்டி காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த முன்னணி நடிகைகளை ஓவர் டேக் செய்து மெர்சலைப் போலவே தனது கதாபாத்திரத்தை நித்யா மேனன் நிலை நிறுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மிஷன் மங்கள்யான் படப்பிடிப்பு இந்த மாதத்தின் மத்தியில் துவங்கவுள்ளது.
Discussion about this post