தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அவர், தற்போது கவச்சம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்ரீனிவாச மாமில்லா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் காஜல் அகர்வால் பேசும் போது, “வித்தியாசமான கதைக் களம் கொண்ட த்ரில்லர் திரைப்படம். த்ரில்லரோடு ரொமான்ஸும் அமைந்திருக்கிறது. இந்த படத்தில் மிகவும் ரசித்து, விரும்பி நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்தின் அளவு குறைவாக இருந்தாலும் சிறப்பாக வந்திருக்கிறது. கதை சொல்லும் போது பிடித்திருந்ததை விட அதில் நடிக்கும் போது இன்னும் சுவாரஸ்யமாக அமைந்தது. கதைதான் இப்படத்தின் நாயகன்” என்று சொல்லி படக்குழுவினர் ஒவ்வொருவரைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.
அப்போது ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு பற்றி பேசினார். அச்சமயம் மேடையில் நேரடியாக காஜல் பேசும் இடத்திற்குச் சென்று சோட்டா திடீரென காஜலின் கன்னத்தில் முத்தமிட்டார். இதனையடுத்து, தங்களது குடும்பத்தில் ஒருவர் போன்றவர் சோட்டா என காஜல் கூறி சமாளித்தார்.
சோட்டா கே நாயுடு, பல பெரிய தெலுங்குப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். ரஜினிகாந்த் நடித்த பாபா படத்திற்கும் அவர் தான் ஒளிப்பதிவு செய்தார்.
Discussion about this post