முதலில் சர்கார் படத்தைப் போலவே சிறியதாக ஆரம்பித்த இப்பிரச்சினை தற்போது தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றுள்ளது. 96 படம் தன்னுடைய 92 படத்தின் கதை எனக் கூறும் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷும் பாரதிராஜாவும் பாரதிராஜா அலுவலகத்தில், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக பாரதிராஜா தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “கடந்த 2012 டிசம்பரில் எனது உதவி இயக்குநர் சுரேஷ் சத்ரியன் சென்னையில் உள்ள எனது அலுவலகத்தில் ‘92’ என்ற தலைப்பில் கூறிய கதையைக் கேட்டு வியந்து, பாராட்டி உடனே அதை கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள எனது தோட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக விவாதித்து, ‘பால்பாண்டி என்கிற பாரதி’ அல்லது ‘நீ, நான், மழை, இளையராஜா’ என்கிற தலைப்புகளில் அக்கதையை இயக்குவதாக முடிவு செய்திருந்தேன்.
ஆனால், ‘ஓம்’ படம் துவக்கப்பட, அதனுடைய வெளிநாட்டுப் படப்பிடிப்புகள் மற்றும் அதைச் சார்ந்த வேலைகளால் இந்தப் படத்தின் வேலை சற்றுத் தள்ளிப்போனது. எனவே, அந்தக் காலகட்டத்திலேயே எனது ஆலோசனைப்படி மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இக்கதை தொடர்பாக அணுகுமாறு கூறியிருந்தேன். அவரும் முயற்சி எடுத்தார்.
இது இவ்வாறு இருக்கையில் MADRAS ENTERPRISES என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் திரு.நந்தகோபால் அவர்களால் தயாரிக்கப்பட்டு திரு.சி.பிரேம்குமார் அவர்களால் இயக்கப்பட்டு, திரு.விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘96’ எனும் அப்படத்தை 11-10-2018 அன்று எனக்கு திரையிட்டுக் காட்டினார்கள். இத்திரைப்படம் தொடக்கம் முதலே எனது உதவியாளர் கூறிய கதையின் முழுப்பிரதியாக இருந்ததைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என் உதவி இயக்குநர் மனமுடைந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இது வேதனைக்கும், மன உளைச்சலுக்குமானது மட்டுமல்ல, தடுத்து நிறுத்தப்பட வேண்டியது, தீர்வு காணப்பட வேண்டியது என்பதை உணர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் அவர்களை 12-10-2018 அன்று அழைத்துப் பேசினேன். எவ்வித முடிவும் எட்டப்படாததால், தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை நாடியுள்ளேன்.
மேலும் ‘அசுரவதம்’ படத்தின் இயக்குநர் மருதுபாண்டியனை 2014 வருட இறுதியில் நண்பர் என்ற முறையில் அழைத்து தன்னுடைய கதையை சுரேஷ் விவாதித்துள்ளார். மருதுபாண்டியன் ‘96’ படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் அக்கதையின் கதை விவாதத்திலும் தொடக்கம் முதலே பங்கெடுத்துள்ளார். மருதுபாண்டியனை விசாரித்தபொழுது 2014ஆம் ஆண்டு எனது உதவியாளர் கதை கூறியதை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் எனது உதவியாளரின் கதை எவ்வாறு ‘96’ ஆனது என்பது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தின் நகலை இயக்குநர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கம், பெப்சி அமைப்பு ஆகியவற்றுக்கும் அனுப்பியுள்ளார் பாரதிராஜா.
இந்த விஷயத்தில் முன்னணி இயக்குநரான பாரதிராஜா நேரடியாகத் தலையிட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் எப்படிப்பட்ட முடிவு வரும் என்பது குறித்த யூகங்கள் அதிகரித்துள்ளன.
பொதுவாக பாரதிராஜா தனது படங்களுக்கான கதையினை மற்றவர்களிடமிருந்து வாங்கி அவர்களுக்கான அங்கீகாரம் கொடுத்துவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post