பிரபல கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி, பிரபல இயக்குநர் ரவிஸ்ரீவத்சா மீது மீ டூவில் பாலியல் புகார் கூறினார். அவரது இயக்கத்தில் ஹண்டா ஹண்டதி என்ற திரைப்படத்தில் நடித்தபோது படத்தின் ஹீரோவுக்கு 50 முறை முத்தம் கொடுக்கச் சொல்லி துன்புறுத்தியதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்திருந்த இயக்குநர் ஸ்ரீவத்சா, சஞ்சனாவின் குற்றச்சாட்டு எதுவும் நம்பும்படியாக இல்லை. அவருக்கு இணக்கமான காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை என்றால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கக் கூடாது. இந்தப் புகாருக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் கன்னட இயக்குநர்கள் சங்கம் வரை சென்று, இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசப்பட்டது.
இந்த நிலையில் மேம்போக்கான குற்றச்சாட்டை யார் மீதும் தொடுக்கக் கூடாது என்றும், இயக்குநர் மீதான குற்றச்சாட்டை நடிகை சஞ்சனா திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்றும் நடிகர் அம்பரீஸ் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சஞ்சனா கல்ராணி, தனது மீ டூ புகாருக்கு வருத்தம் தெரிவித்திருப்பதுடன், இயக்குநரிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். இது தொடர்பாக சஞ்சனா, “நான் எனது வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தைச் சொன்னேன். அப்போது எனக்கு மிகவும் குறைந்த வயது என்பதால் சொல்ல முடியவில்லை. இப்போது அதற்கான வாய்ப்பு அமைந்ததால் சொன்னேன். யாரையும் களங்கப்படுத்த வேண்டும் என்பதோ, தண்டிக்க வேண்டும் என்பதோ என் நோக்கம் அல்ல.
இது தொடர்பாக நான் மதிக்கும் நடிகர் அம்ரீஷ், தொட்டண்ணா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் என்னிடம் பேசினார்கள். அவர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து ஹண்டா ஹண்டதி பட இயக்குநர் மற்றும் படக்குழுவினர். கன்னட நடிகர் சங்கம், வர்த்தக சங்கம் ஆகியவற்றிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி, இதுகுறித்து எதுவும் பேச விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார்.
Discussion about this post