நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்கள் யாரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வர மாட்டார்கள் என பக்தி பாடகர் வீரமணி ராஜூ ஆவேசமாகக் கூறியுள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து கேரளாவில் இந்து அமைப்புகள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சபரிமலைக்கு செல்ல முற்படும் ஒரு பெண்ணை கூட அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் சபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்த்து வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வடபழனி ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஐயப்ப பக்தி பாடகர்கள் வீரமணி ராஜூ மற்றும் வீரமணிதாசன் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி ராஜூ, ‘சபரிமலையை பொறுத்த வரை ஐயப்பன் திருமணம் ஆகாதவராக இருப்பதால் அங்குப் பெண்கள் வரக் கூடாது என ஐயப்பனே செய்த வரையறை. ஐயப்பனிடம் விளையாட நினைப்பவர்கள், அவர் விளையாட ஆரம்பித்தால் தாங்கி கொள்ள மாட்டார்கள். நல்ல குடும்பத்து பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர நினைக்க மாட்டார்கள். சமூக செயற்பாட்டாளர் என்ற பெயரில் திருப்தி தேசாய் போன்றோர் சபரிமலைக்கு வந்து புனிதத்தை கெடுக்க நினைத்தால் அதற்கான எதிர்வினையை அவர் சந்திப்பார்’ என்று ஆவேசம் பொங்க பேசியுள்ளார்.
Discussion about this post