ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகளுக்கு இப்படம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை உருவான ஷங்கர் படத்திலேயே இதுதான் மிகக் குறைந்த நேரம் ஓடும் திரைப்படமாக இருக்கும்.
தணிக்கைக் குழுவினர் காட்சிகளில் பெரிய அளவில் கத்திரி வைக்கவில்லை. ஆனால், வசனங்களில் தாராளமாகக் கைவைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
‘யுனிசெல்’ என்ற நிறுவனத்தின் பெயரைத் திரைப்படத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே, ‘புற்று நோய்,’ ‘கருச்சிதைவு’, ‘ஆண்மைக் குறைவு’, ‘லஞ்சம்’, ‘45 வருடம்’ ஆகிய வசனங்களை நீக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டிருக்கிறது. அத்துடன் ‘9’ என்ற வார்த்தையை நீக்கச் சொல்லியும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ‘9’ என்ற எண்ணை, ‘வார்த்தை’ என சென்சார் குழு குறிப்பிட்டிருப்பதன் காரணம் அது ஒரு தனி நபரைக் குறிப்பதாகவே இருக்க வேண்டும்.
ஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படத்தில் திருநங்கை கேரக்டரைத் தவறான விதத்தில் சித்தரித்திருந்ததாகக் கூறி வலுவான எதிர்ப்புகள் எழுந்தன. ஷங்கர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அளவுக்கு அந்தப் போராட்டங்கள் வலுப்பெற்றன. ஆனால், மீண்டும் அடுத்த படத்திலேயே ஷங்கர் அப்படியொரு சூழலை உருவாக்கி வசனம் மூலம் உயிர் கொடுத்திருக்கிறாரோ என்ற சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது தற்போது வெளியாகியிருக்கும் தகவல்.
Discussion about this post