தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன் உட்படச் சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி. கன்னடப் படங்களிலும் நடித்திருக்கும் இவர் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதைக் கடந்த ஆண்டு பெற்றார்.
கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டபோது, அவரை மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அதற்கு நடவடிக்கை எடுக்காத நடிகர் சங்கத்துக்கு எதிராகவும் பார்வதி பேசி வந்தார்.
நடிகைகள் சிலர் தொடங்கியுள்ள திரைப்படப் பெண்கள் கூட்டமைப்பிலும் அவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். முன்னணி நடிகர்களான மோகன் லால், மம்மூட்டிக்கு எதிராகவும் அவர் கருத்து கூறி வந்தார். தனக்கு வாய்ப்புகள் வழங்காமல் மலையாளத் திரையுலகம் ஓரம் கட்டுகிறது என்றும் நடிகர் சங்கத்தை எதிர்ப்பதால் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் புகார் கூறியிருந்தார். இவற்றுடன், சபரிமலை தீர்ப்பை வரவேற்று அறிக்கையும் வெளியிட்டார்.
அவரது செயல்கள் பலவற்றுக்கும் அவரது சமூக வலைதள பக்கத்தில் கண்டனங்களையும், ஆபாசமான திட்டுக்களையும் சம்பாதித்துவந்தார். தன்னை ஆபாசமாகத் திட்டிய சிலர் மீது சைபர் கிரைமில் புகார் கொடுத்து கம்பி எண்ண வைத்தவர் பார்வதி.
மேற்கண்ட சம்பவங்களில் ஏற்பட்ட ஈடுபாட்டினால் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரபரப்பாகச் செயல்பட்டு வரும் பார்வதி, இப்போது அவற்றிலிருந்து வெளியேறிவிட்டார் என்று மலையாள ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம், “இன்ஸ்டகிராமில் என்னைப் பின்தொடர்பவர்களுக்கும் எனது கருத்துகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கும் நன்றி. இதிலிருந்தும் சினிமாவில் இருந்தும் எனக்குக் கொஞ்சம் இடைவெளி தேவைப்படுகிறது. அதனால் கொஞ்ச காலம் இன்ஸ்டகிராமுக்கு வர மாட்டேன். பாதுகாப்பாக இருங்கள், அன்பாக இருங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே கேரள மழை, வெள்ளத்துக்குப் பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் இயங்கி வந்தார். இப்போது திடீரென்று அதிலிருந்தும் விலகியுள்ளார். அவரது சமூக வலைதளக் கணக்குகளும் செயல்பாட்டில் இல்லை. இது குறித்து பார்வதி எந்த அற்விப்பும் வெளியிடாத நிலையில், அவரே வெளியேறினாரா அல்லது யாராவது முடக்கி வைத்துள்ளனரா என்னும் ஐயம் எழுந்துள்ளது.
Discussion about this post