கன்னடத் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் அம்பரீஷ். ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவருக்கு நேற்று இரவு 9 மணியளவில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அம்பரீஷைக் கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அம்பரீஷ் காலமானார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிவித்தார்கள்.
இது குறித்து பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர், “வீட்டில் இருந்து நடிகர் அம்பரீஷை அழைத்து வரும்போது சுயநினைவின்றி இருந்தார். அதன்பிறகு சுவாசம் இயல்புநிலைக்கு வருவதற்குத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் இரவு 10.15 மணிக்குப் பிரிந்தது” எனத் தெரிவித்தார்.
திகைக்க வைக்கும் திரை வாழ்க்கை
கடந்த 1952ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி மாண்டியா மாவட்டம், தொட்டரசினகெரெவில் நடிகர் அம்பரீஷ் பிறந்தார். திரைப்படங்களில் வில்லன் நடிகராக அறிமுகமானவர், படிப்படியாக உயர்ந்து, ஹீரோவாக வலம் வந்தார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அம்பரீஷ். முரட்டுக்காளை முதலான படங்களில் நடித்த சுமலதாவை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
மரணிக்கும் முன்பே முடிந்த அரசியல் வாழ்க்கை
அரசியலிலும் நடிகர் அம்பரீஷ் தனி முத்திரை பதித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாகவும், மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். ஜனதா தளம் கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அம்பரீஷ். மாண்டியா தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் 2013 முதல் 2016 வரை வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்து, சிறப்பாகப் பணியாற்றினார்.
கடந்த 2006-07ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக நடிகர் அம்பரீஷ் இருந்தார். காவிரிப் பிரச்சினை காரணமாக தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
Discussion about this post