கஜா புயல் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாய் திரண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 16ஆம் தேதி கரையைக் கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ஆம் தேதியன்று பத்திரிகைகளின் வாயிலாக பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதைதொடர்ந்து, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும், அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் நிதிகளை வழங்கி வருகின்றனர். இதுவரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக நேற்று (நவம்பர் 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது தமிழக அரசு.
Discussion about this post